கல்விச் சுற்றுலா தொடர்பில் புதிய சட்டங்கள்

மாணவர்களின் கல்விச் சுற்றுலா தொடர்பிலான கல்வி அமைச்சின் தீர்மானம்

by Staff Writer 25-02-2020 | 11:25 AM
Colombo (News 1st) பாடசாலை மாணவர்களை கல்விச் சுற்றுலாவிற்கு அழைத்துச்செல்வது குறித்து புதிய சட்டங்கள் உள்ளடங்கிய சுற்றுநிரூபத்தை அதிகாரிகளுக்கு அனுப்புவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. கோமரங்கடவல - மதவாச்சி குளத்தில் மூழ்கி பாடசாலை மாணவர்கள் நால்வர் உயிரிழந்ததைத் தொடர்ந்து இது குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்விச் சுற்றுலாவை ஏற்பாடு செய்யும்போது, பயணத்தூரம் குறித்து கவனம் செலுத்தும் புதிய சட்டங்களை உள்ளடக்குவதற்கும் கல்வி அமைச்சு நடவடிக்கை தீர்மானித்துள்ளது. இதனைத் தவிர, மாணவர்களை அழைத்துச் செல்வதற்கு தீர்மானிக்கப்பட்ட பகுதிகள், தங்குமிடங்கள் மற்றும் பயணத்தூரம் ஆகியன அடங்கிய அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கும் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. திருத்தங்கள் மற்றும் புதிய சட்டங்களடங்கிய சுற்றுநிரூபத்தை மாகாண கல்வி செயலாளர்கள், மாகாண கல்விப் பணிப்பாளர்கள், வலயக்கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அனைத்து அதிபர்களுக்கும் வழங்கப்படவுள்ளது. இதேவேளை, மதவாச்சி குளத்தில் நீராடச்சென்று உயிரிழந்த 4 மாணவர்கள் குறித்த விசாரணைகளுக்கு மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.