மத்திய அதிவேக வீதி: மீண்டும் விலைமனு கோர தீர்மானம்

மத்திய அதிவேக வீதியின் மூன்றாம் கட்ட நிர்மாண பணிகளுக்கு மீண்டும் விலைமனு கோர தீர்மானம்

by Staff Writer 25-02-2020 | 9:20 PM
Colombo (News 1st) மத்திய அதிவேக வீதியின் மூன்றாம் கட்ட நிர்மாணப் பணிகளை Taisei Corporation நிறுவனத்திடமிருந்து நீக்கி மீண்டும் விலைமனு கோருவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தை விஸ்தரிப்பதற்கான ஒப்பந்தமும் குறித்த நிறுவனத்திற்கே வழங்கப்பட்டுள்ளது. Taisei Corporation தொடர்பில் இலங்கையில் மாத்திரமல்லாது சர்வதேச மட்டத்திலும் பல பிரச்சினைகள் எழுந்திருந்தன. மத்திய அதிவேக வீதியின் மூன்றாம் கட்டத்திற்கான ஒப்பந்தத்தை இந்த நிறுவனம் பெற்றுக்கொண்ட விதம் இதில் முக்கியத்துவம் பெறுகின்றது. Taisei நிறுவனம் விலைமனுவிற்கானபிணையை வழங்கத் தவறியதால் விலைமனு செயற்பாட்டின்போது தகைமைகளைப் பூர்த்தி செய்யாத நிறுவனமாக அறிவிக்கப்பட்டது. மீண்டும் விலைமனு தாக்கல் செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டபோது, Taisei நிறுவனமே அதிகத் தொகைக்கான விலை மனுவை சமர்ப்பித்திருந்தது. இலங்கை மீண்டும் ஜப்பான் தூதரகத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய ஃபுஜிட்டா நிறுவனம் அதற்கான விலை மனுவை சமர்ப்பித்ததுடன், அந்த விலைமனுவில் தகைமைகள் பூரணப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டு ஒப்பந்தம் Taisei நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. அந்த சந்தர்ப்பத்திலும் ஃபுக்கஓகா நகரில் பிரதான வீதியொன்று தாழிறங்கிய சம்பவம் தொடர்பில் Taisei நிறுவனம் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. Taisei நிறுவனம் சுரங்கப்பாதையொன்றை நிர்மாணிப்பதற்காக அகழ்வில் ஈடுபட்டிருந்தபோதோ வீதி தாழிறங்கியிருந்தது. விலைமனு மோசடி தொடர்பில் Taisei நிறுவனம் உலகப் புகழ்பெற்றுள்ளது. Taisei நிறுவனம் விலைமனு மோசடியில் ஈடுபட்டதாக 2017 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஜப்பானின் நீதியான வர்த்தகம் தொடர்பிலான ஆணைக்குழு குற்றம் சுமத்தியிருந்தது. ஜப்பானின் நடைமுறை சட்டத்திற்கமைய வர்த்தக சர்வாதிகாரத்தை தடுப்பதற்கான சட்டத்தை மீறியதாக குறித்த நிறுவனத்திற்கு எதிராகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதுடன், அது தண்டனைக்குரிய குற்றமாகும். தனது வருடாந்த அறிக்கையில் இந்த குற்றத்தை ஒப்புக்கொண்ட Taisei நிறுவனம் அதற்காக வருத்தம் தெரிவித்திருந்தது. இதேவேளை, Taisei நிறுவனத்தின் நிறைவேற்றதிகாரிகள் 2020 டோக்கியோ ஒலிம்பிக் விழாவிற்கான கட்டடங்கள் மற்றும் நிர்மாணப் பணிகளுக்கான விலைமனு கோரலின் போது முறைகேடுகளில் ஈடுபட்டதால் அந்த நிறுவனத்தை குறித்த செயற்பாடுகளில் இருந்து நிறுத்துவதற்கு ஏற்பாட்டாளர்கள் தீர்மானித்தனர். அத்தோடு, கொழும்பு ஹில்டன் ஹோட்டலை நிர்மாணிக்கும் ஒப்பந்தத்தின்போது ஒரு மாடியைக் குறைத்து நிர்மாணித்ததாக Taisei நிறுவனம் மீது குற்றம் சுமத்தப்பட்டதுடன் அது தொடர்பில் சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. எவ்வாறாயினும், மத்திய அதிவேக வீதியின் மூன்றாம் கட்ட நிர்மாணப் பணிகள் இதுவரை ஆரம்பமாகவில்லை என்பதுடன் இரண்டாம் கட்டத்தின் நிர்மாணப்பணிகளை பூர்த்தி செய்வதற்கும் பொத்துஹெர இடைநிலை பரிமாற்றத்தை அமைக்க வேண்டியிருந்தது. எவ்வாறாயினும் அரசாங்கம் அதனை மீளக் கோரிய போது, இடைநிலை பரிமாற்றத்தை அமைப்பதற்கான ஒப்பந்தம் வழங்கப்படாவிட்டால் வீதியின் எஞ்சிய பகுதியை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தையும் ​மேற்கொள்ள முடியாது எனTaisei நிறுவனம் இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்தது. இத்தகைய பின்புலத்திலேயே கட்டுநாயக்க விமான நிலையத்தை விஸ்தரிப்பதற்கான ஒப்பந்தம் Taisei நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. ஆட்சிக்கு வருகின்ற அரசியல் கட்சிகள் மாறினாலும் ஒப்பந்தம் செய்யப்படுகின்ற நிறுவனங்கள் மாறாதிருப்பதற்கு காரணம் என்ன?