நெடுந்தீவு பிரதேசசபை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வசம்

நெடுந்தீவு பிரதேச சபை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வசமானது

by Staff Writer 25-02-2020 | 7:49 PM
Colombo (News 1st)  நெடுந்தீவு பிரதேச சபைக்கான தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவு இன்று பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் பெட்ரிக் டிரஞ்சன் தலைமையில் இடம்பெற்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பினை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் அங்கத்தவர்கள் எவரும் தெரிவுக்கூட்டத்திற்கு சமூகமளிக்கவில்லை. ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் 6 உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு உறுப்பினரும் சுயேட்சைக் குழுவின் 2 உறுப்பினர்களும் உட்பட 9 உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் பிரசன்னமாகி இருந்தனர். தற்போது தலைவராக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் நல்லதம்பி சசிகுமாரும்  உப தவிசாளராக சந்தியாப்பிள்ளை தோமஸ் செல்வராஜும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு வருடங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அதிகாரம் பெற்று எந்தவித முன்னேற்றங்களையும் மேற்கொள்ளவில்லை என மக்கள் விசனம் தெரிவித்து வந்த நிலையில், தற்போது ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் வசம் நெடுந்தீவு பிரதேச சபை சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.