இராஜகிரிய சதுப்புநிலப் பகுதியில் தீ பரவல்

by Staff Writer 25-02-2020 | 3:14 PM
Colombo (News 1st) பாராளுமன்றத்தை அண்மித்த பகுதியான இராஜகிரிய - மாதினாகொட காட்டுப் பகுதியின் சதுப்புநிலத்தில் தீ பரவியுள்ளது. இன்று பிற்பகல் 12.45 மணியளவில் பரவிய தீயைக் கட்டுப்படுத்துவதற்காக ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை தீயணைப்பு படை வீரர்களின் நான்கு வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. சதுப்பு நிலப் பகுதியில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்துவதற்காக விமானப்படையினரின் பெல்-212 ரக ஹெலிகொப்டர் பயன்படுத்தப்பட்டுள்ளது. சட்டவிரோத மதுபானத்திற்கு பயன்படுத்தும் சில பீப்பாய்கள் இங்கு காணப்பட்டமையால், சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபடுபவர்கள் தீ பரவக் காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். சட்டவிரோத மதுபான உற்பத்தியாளர்களே தீயைப் பற்றவைத்துள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர். இன்று மாலை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் குறித்த பகுதியில் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதி பாராளுமன்றத்தை சூழவுள்ள தியவன்ன ஓயாவை அண்மித்துள்ள காட்டில் சட்டவிரோத மதுபான கடத்தலில் ஈடுபட்டிருந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். கொழும்பு கலால் வரித் திணைக்களம் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 6 இலட்சம் பெறுமதியான மதுபானம் கைப்பற்றப்பட்டிருந்தது.