by Staff Writer 25-02-2020 | 10:41 AM
Colombo (News 1st) நிர்ணய விலையை விடவும் அதிக விலைக்கு பெரிய வெங்காயத்தை விற்பனை செய்யும் வர்த்தகர்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகள் இன்று (25) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென அதிகார சபையின் விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்துள்ளார்.
தற்போது கொழும்பு மெனிங் சந்தையில் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம், 150 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்துக்கு கடந்த 23 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டது.
இதற்கிணங்க, ஒரு கிலோகிராம் இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்தின் அதிகபட்ச சில்லறை விலையாக 190 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
சந்தையில் கடந்த நாட்களில் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.