by Staff Writer 24-02-2020 | 10:08 PM
Colombo (News 1st) முல்லைத்தீவு - வட்டுவாகலில் இறுதிப்போரின்போது இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஆட்கொணர்வு மனுக்கள் மீதான விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
2009 ஆம் ஆண்டு மே மாதம் இறுதிப்போரில் இராணுவத்திடம் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான இரண்டாம்கட்ட வழக்கு விசாரணை இன்று (24) நீதவான் S. லெனின்குமார் முன்னிலையில் இடம்பெற்றது.
இந்த வழக்கில் மனுதாரர்கள் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ். ரத்னவேல் மன்றில் ஆஜராகினார்.
மனுதாரர் தரப்பு சாட்சி விசாரணைகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில் எதிர்வரும் ஏப்ரல் 29ஆம் திகதி பிரதிவாதித் தரப்பு சாட்சி விசாரணைகள் ஆரம்பமாகவுள்ளன.
இன்றைய வழக்கு விசாரணைக்காக இராணுவத் தரப்பை சேர்ந்த சட்டத்தரணிகள் மன்றுக்கு வருகைதந்த சந்தர்ப்பத்தில் விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டதோடு நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் அரசியல்பிரிவு தளபதிகளில் ஒருவரான எழிலன் உள்ளிட்ட 12 பேர் தொடர்பான ஆட்கொணர்வு மனு மீதான விசாரணைகள் கடந்த சில வருடங்களாக முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இடம்பெற்று வந்தது.
அத்துடன், எழிலன் உள்ளிட்ட ஐவர் தொடர்பான ஆட்கொணர்வு வழக்கு விசாரணைகள் வவுனியா மேல் நீதிமன்றத்திலும் மிகுதியாக உள்ளவர்களின் வழக்குகள் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றிலும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.