புதிய அதிவேக நெடுஞ்சாலையில் நாளை முதல் பஸ் சேவை

நேற்று திறக்கப்பட்ட அதிவேக நெடுஞ்சாலையில் நாளை முதல் பஸ் போக்குவரத்து

by Fazlullah Mubarak 24-02-2020 | 11:15 AM

அதிவேக நெடுஞ்சாலையில் ஹம்பாந்தோட்டையில் இருந்து கொழும்பு - கோட்டை வரையிலான பஸ் சேவை நாளை (25) ஆரம்பமாகவுள்ளது.

பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ ஆரம்ப நிகழ்வுகள் அமைச்சர் மஹிந்த அமரவீரவின் தலைமையில், தங்காலை பஸ் நிலையத்தில் இடம்பெறவுள்ளன. இதற்கமை, அப்பகுதியூடான பஸ் கட்டணங்களாக  ஹம்பாந்தோட்டையில் இருந்து கோட்டை வரை 880 ரூபா அறவிடப்படவுள்ளது. தங்காலையில் இருந்து கோட்டை வரையிலான பஸ் கட்டணம் 680 ரூபாவாகும். ஹம்பாந்தோட்டையில் இருந்து மாக்கும்புர வரையான பஸ் கட்டணமாக 810 ரூபா அறவிடப்படவுள்ளதுடன், தங்காலையில் இருந்து மாக்கும்புர 610 ரூபா அறவிடப்படவுள்ளது. நேற்று திறக்கப்பட்ட மாத்தறை - ஹம்பாந்தோட்டை நெடுஞ்சாலையில் புதிதாக 10 சொகுசு பஸ்கள் சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்திருந்தது. இந்த பஸ்கள் மாத்தறை - ஹம்பாந்தோட்டை அதிவேக நெடுஞ்சாலையில் இருந்து, கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் கடவத்தை வரையில் சேவையில் ஈடுபடவுள்ளன. இந்த பஸ் சேவை அம்பலாந்தோட்டை , தங்காலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய இடங்களில் இருந்து ஆரம்பமாகவுள்ளது.