தமிழர்களுக்கு எதுவும் செய்ய முடியாமற்போன தலைவர்கள் பதவி விலகுங்கள்: மன்னாரில் ஒருவர் உண்ணாவிரதம்

by Bella Dalima 22-02-2020 | 9:27 PM
Colombo (News 1st)  தமிழ் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாகப் பதிவு செய்ய வேண்டும் எனும் கோரிக்கை உள்ளடங்கலாக மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்து மன்னாரில் ஒருவர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். மன்னாரிலுள்ள தந்தை செல்வா உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து அவர் தனது போராட்டத்தை ஆரம்பித்தார். மன்னார் - சின்னக்கரிசல் கிராமத்தைச் சேர்ந்த ரத்தினம் ஞானசேகரம் ஜூலியஸ் என்பவரே மன்னார் நகரசபைக்கு முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். சொல்லொண்ணா துன்ப துயரங்களை தொடர்ந்து அனுபவித்து வரும் மக்கள் ஒவ்வொரு தேர்தலிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை வெற்றியடையச் செய்த போதிலும், பாராளுமன்றம் செல்லும் அவர்களால் மக்களுக்கு எவ்விதத் தீர்வும் கிட்டவில்லை என ரத்தினம் ஞானசேகரம் ஜூலியஸ் குறிப்பிட்டார். கூட்டமைப்பை கட்சியாகப் பதிவு செய்யுமாறும் அதற்கான யாப்பினை எழுதுமாறும் ஜூலியஸ் கோரிக்கை முன்வைத்தார். நீண்ட காலம் தமிழர்களுக்கு எதுவும் செய்ய முடியாமற்போன தலைவர்கள் மக்களுக்கு பொறுப்புக்கூறி பதவி விலக வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். இளைஞர்களைக் கொண்டு கூட்டமைப்பைப் பலப்படுத்தி அடுத்த தலைமுறையிடம் பொறுப்பைக் கைமாற்றுமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.