தூக்குக் கயிறு கேட்டுக் கதறும் சிறுவன்

கேலி, கிண்டலால் துவண்டு போன சிறுவன் தூக்குக் கயிறு கேட்டுக் கதறும் அவலம்

by Bella Dalima 22-02-2020 | 5:14 PM
Colombo (News 1st) குள்ளமான தோற்றம் காரணமாக கேலி, கிண்டலுக்கு ஆளான சிறுவன் தனது தாயிடம் தனக்கு வாழ்வதற்கே பிடிக்கவில்லை என்று தற்கொலை செய்துகொள்ள தூக்குக்கயிறு தரும்படி கேட்டு மன்றாடும் வீடியோ வெளியாகி பார்ப்போரின் நெஞ்சை உலுக்கியுள்ளது. அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரை சேர்ந்த பெண் யர்ராகா பேல்ஸ். இவரது 9 வயது மகன் குவாடன், மரபணு நோயால் பாதிக்கப்பட்டு உடல் வளர்ச்சி குன்றி காணப்படுகிறான். அவலமான தோற்றம் காரணமாக குவாடனை, பள்ளியில் சக மாணவர்கள் தொடர்ந்து கேலி, கிண்டல் செய்து வருகின்றனர். இதனால் அவன் மிகவும் மனமுடைந்து போனான். இது குறித்து தனது தாயிடம் கூறி கதறி அழுத குவாடன், தனக்கு வாழ்வதற்கே பிடிக்கவில்லை என்றும் தற்கொலை செய்துகொள்ள தூக்குக்கயிறு அல்லது கத்தி போன்ற ஏதாவது ஆயுதம் தரும்படி கேட்டு மன்றாடினான். மகனின் கதறலையும், கண்ணீரையும் பார்த்து உடைந்துபோன யர்ராகா, மற்றவர்களை கேலி-கிண்டல் செய்வதால் ஏற்படும் விளைவுகள் குறித்து உலகிற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், தன் மகன் குவாடன் தற்கொலை செய்வதாகக் கூறி கதறி அழுத காட்சிகளை கையடக்கத் தொலைபேசியில் வீடியோ எடுத்து பேஸ்புக்கில் பதிவிட்டார். வீடியோ வெளியான சிறிது நேரத்திலேயே இலட்சக்கணக்கானோர் அதை பார்த்தனர். அதனைத் தொடர்ந்து, யர்ராகாவிற்கும், குவாடனுக்கும் நம்பிக்கையூட்டும் ஆதரவு கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். அத்தோடு, பார்ப்போரின் நெஞ்சை உலுக்கும் அந்த வீடியோவை இணையவாசிகள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்து, குவாடனுக்கு ஆதரவாக குரலெழுப்பி வருகின்றனர். ஹக் ஜேக்மேன், ஜெஃப்ரி டீன் மோர்கன் உள்ளிட்ட பல்வேறு திரை நட்சத்திரங்களும் குவார்டனுக்கு ஆதரவையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி தேசிய ரக்பி போட்டியின் போது குவாடனை விளையாட்டு மைதானத்திற்கு வரவழைத்து கௌரவப்படுத்த விளையாட்டு வீரர்கள் விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.