உதயசூரியன் சின்னத்தில் தமிழர் ஐக்கிய முன்னணி உதயம்

by Bella Dalima 22-02-2020 | 9:14 PM
Colombo (News 1st) ஐந்து தரப்பினர் இணைந்து தமிழர் ஐக்கிய முன்னணி என்ற கூட்டணியை நேற்று (21) மட்டக்களப்பில் உருவாக்கியுள்ளனர். உதய சூரியன் சின்னத்தில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அவர்கள் உத்தியோகபூர்வமாக அறிவித்தனர். தமிழர் ஐக்கிய முன்னணி என்ற பெயரில் கிழக்கு தமிழர் ஒன்றியம், தமிழர் விடுதலைக் கூட்டணி, இலங்கை தமிழர் முற்போக்கு முன்னணி, முற்போக்கு தமிழர் அமைப்பு, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி போன்ற 5 கட்சிகளும் போட்டியிட முன்வந்துள்ளதாக கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் தலைவர் T.சிவநாதன் தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தமது கொள்கைகளை அவர்கள் ஏற்றுக்கொண்டதாகவும் T.சிவநாதன் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், தமது வீட்டுச் சின்னத்தைக் கைவிட்டு பொதுச்சின்னத்தில் போட்டியிடுவதில் பிரச்சினை உள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்ததாக அவர் கூறினார். இதேவேளை, பெரியவர்களால் உருவாக்கப்பட்ட கட்சியை சின்னாபின்னப்படுத்தி, தங்கள் தேவைக்காக கட்சியை விற்று பிழைத்தவர்கள் தான் இன்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பெயரில் மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.