காங்கேசன்துறை துறைமுக நிர்மாணத்திற்கான கள ஆய்வு

காங்கேசன்துறை துறைமுக நிர்மாணத்திற்கான கள ஆய்வு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது

by Staff Writer 21-02-2020 | 5:28 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம், காங்கேசன்துறை துறைமுக நிர்மாணத்திற்கான கள ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே நியூஸ்ஃபெஸ்ட்டிற்கு குறிப்பிட்டார். இந்திய எக்ஸிம் வங்கியின் (Exim Bank) நிதி உதவியுடன் காங்கேசன்துறை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாகவும் அவர் கூறினார். கள ஆய்வின் பின்னர் துறைமுகத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படும் எனவும் சுமார் நான்கு வருடங்கள் நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்படும் எனவும் பிரியந்த மாயாதுன்னே தெரிவித்தார். இதன் பின்னர் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் கப்பல் சேவையை முன்னெடுக்க முடியும் எனவும் அவர் கூறினார். இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தக நடவடிக்கைகளை காங்கேசன்துறை துறைமுகத்தினூடாக மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சின் செயலாளர் பிரியந்த மயாதுன்னே சுட்டிக்காட்டினார்.