ஐ.நா தீர்மானத்திலிருந்து அரசாங்கம் விலக அமைச்சரவை அனுமதி

by Staff Writer 20-02-2020 | 10:08 AM
Colombo (News 1st) ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 31/1 தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கும் செயற்பாட்டிலிருந்து விலகுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தற்போது நடைபெற்று வரும் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பி​ல் இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் யோசனை முன்வைக்கப்பட்டதாகவும்  மக்கள் அதிகளவில் எதிர்ப்புத் தெரிவித்த மற்றும் சர்ச்சையை ஏற்படுத்திய ஐ.நா. மனித உரிமை பேரவையின் 30/1 மற்றும் 40/1 பிரேரணைகளில் இருந்து விலகுவதற்கான அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதாக பந்துல குணவர்தன இதன்போது குறிப்பிட்டுள்ளார். நாட்டைக் காப்பாற்றிய இராணுவத்தினருக்கு எதிராக, முன்வைக்கப்பட்ட இந்த யோசனை தொடர்பில் நாட்டை நேசிக்கும், இலங்கை மக்கள் எதிர்ப்பை தெரிவித்ததாக அவர் மேலும் கூறியுள்ளார். இவ்வாறான அனர்த்தத்திலிருந்து நாட்டை மீட்பதற்கே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு மக்கள் பெரும்பான்மை வாக்குகளை வழங்கிதால் இதற்கு அமைச்சரவை ஏகமனதாக அனுமதியை வழங்கியுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் கூறினார். குறித்த தீர்மானங்களிலிருந்து விலகும் செயற்பாடுகளை பிற நாடுகளின் ஒத்துழைப்புடன் வௌிவிவகார அமைச்சரினால் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தேசிய தேவையாக முன்னெடுக்கப்படும் இந்த செயற்பாட்டிற்கு அமைச்சரவையின் அனைத்து அமைச்சர்களும் ஏக மனதாக ஆதரவு வழங்கியதாக பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.