கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக வீதியருகில் தீ பரவல்: போக்குவரத்து முற்றாக நிறுத்தம்

by Staff Writer 20-02-2020 | 7:41 PM
Colombo (News 1st) கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக வீதியை அண்மித்த அம்பலன்முல்ல கழிவுப்பொருட்கள் பிரிவில் பரவியுள்ள தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது. 10 ஏக்கர் பகுதியில் காணப்படும் இந்த குப்பை மேட்டின் உண்மையான உரிமையாளர் கட்டுநாயக்க சீதுவ நகர சபை என பிரதேச மக்கள் தெரிவித்தனர். நேற்று (19) மாலை 6 மணியளவில் தீ பரவ ஆரம்பித்துள்ளது. முத்துராஜவெல சரணாலயத்தை நோக்கி தற்போது தீ பரவி வருகின்றது. எவரேனும் ஒருவரால் அல்லது தற்போது நிலவும் வறட்சியால் தீ பரவியிருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகின்றது. தீயினால் ஏற்பட்ட அதிக புகை மூட்டம் காரணமாக கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக வீதி ஊடாக போக்குவரத்து இன்று பிற்பகல் முதல் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது. தீயைக் கட்டுப்படுத்துவதற்கு சீதுவை நகர சபைக்கு சொந்தமான பௌசர்கள், கொழும்பு மற்றும் நீர்கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டிருந்தன. விமானப் படையின் பெல்-212 ரக ஹெலிகொப்டரின் ஊடாக இன்று மாலை நீர் விசிறப்பட்டது.