மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு; இராணுவம் மறுப்பு

இராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு; இலங்கை இராணுவம் மறுப்பு

by Staff Writer 20-02-2020 | 5:34 PM
Colombo (News 1st) கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக 'த ஹிந்து' செய்தி வௌியிட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை முழுமையாக நிராகரிப்பதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன்ட் கமாண்டர் இசுறு சூரிய பண்டார தெரிவித்தார். இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 700-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மூவாயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் நேற்று (19) கடற்றொழிலுக்கு சென்றனர். மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த போது அங்கு சென்ற இலங்கை கடற்படையினர் படகுகளிலிருந்த மீன்களை கடலில் கொட்டியதுடன், வலைகளை வெட்டி எறிந்ததாக 'த ஹிந்து' செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்பகுதியில் மீண்டும் மீன்பிடிக்கக்கூடாது என கடற்படையினர் எச்சரித்ததையடுத்து, மீனவர்கள் திரும்பிச் சென்றுள்ளனர். விசைப்படகொன்றின் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் படகு சேதமடைந்துள்ளதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூட்டையடுத்து படகின் கண்ணாடி சேதமடைந்துள்ளதுடன், கண்ணாடித் துண்டு பட்டதில் மீனவரொருவர் காயமடைந்துள்ளதாக இந்திய மீனவர்கள் தெரிவித்துள்ளனர். காயமடைந்த மீனவர் இன்று அதிகாலை இராமேஸ்வரம் அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், மதுரை தனியார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக படகின் உரிமையாளர் அளித்த முறைப்பாட்டிற்கமைய குறித்த படகை பொலிஸார் ஆய்வு செய்தனர். எவ்வாறாயினும் கடற்படையினர் மீது சுமத்தப்படுகின்ற இந்த குற்றச்சாட்டை முற்றாக நிராகரிப்பதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன்ட் கமாண்டர் இசுறு சூரிய பண்டார தெரிவித்தார்.