மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இலங்கை குழாம்

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இலங்கை குழாம் அறிவிப்பு

by Staff Writer 19-02-2020 | 7:26 PM
Colombo (News 1st) மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான சர்வதேச ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாத்தில் உபாதைக்குள்ளான தனுஷ்க குணதிலக்கவிற்கு பதிலாக ஷெஹான் ஜயசூரியவிற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்துள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் எதிர்வரும் 22 ஆம் திகதி இலங்கை அணியை எதிர்த்தாடவுள்ளது. 3 போட்டிகள் கொண்ட இந்த சர்வதேச ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாம் இன்று அறிவிக்கப்பட்டது. திமுத் கருணாரத்ன தலைமையிலான இந்த குழாத்தில் 15 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அவிஷ்க பெர்னாண்டோ, குசல் ஜனித் பெரேரா, ஷெஹான் ஜயசூரிய, நிரோஷன் திக்வெல்ல, குசல் மென்டிஸ், அஞ்சலோ மெத்யூஸ் ஆகியோர் இலங்கை அணியின் துடுப்பாட்டத்தை பலப்படுத்துகின்றனர். தனஞ்சய டி சில்வா, திசர பெரேரா, தசுன் ஷானக்க இலங்கை குழாத்தில் இடம்பெற்றுள்ள சகலதுறை வீரர்களாவர். சுழற்பந்துவீச்சாளர்களான வனிந்து ஹசரங்க, லக்சான் சந்தகேனுக்கும் இலங்கை குழாத்தில் இடம் கிடைத்துள்ளது. வேகப்பந்துவீச்சுக்கு இசுரு உதான, நுவன் பிரதீப், லஹிரு குமார ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர். இந்தக் குழாத்திற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும அனுமதி அளித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் சதமடித்த உபுல் தரங்கவிற்கு இலங்கை குழாத்தில் வாய்ப்பளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.