பெரும்பான்மையினரும் ஏற்கும் தீர்வே தேவை: த.தே.கூ

பெரும்பான்மை மக்களும் ஏற்கும் தீர்வையே எதிர்பார்க்கிறோம்: பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினரிடம் கூட்டமைப்பு தெரிவிப்பு

by Staff Writer 19-02-2020 | 7:43 PM
Colombo (News 1st) நாட்டில் வாழும் பெரும்பான்மை மக்களாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வையே எதிர்பார்ப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் மல்கம் ப்ரூஸுடனான (Malcolm Bruce) சந்திப்பின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளது. தீர்வுத்திட்டம் தொடர்பில் பெரும்பான்மை மக்கள் சரியான திசையில் வழிநடத்தப்பட வேண்டும் என இந்த சந்திப்பின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். நிரந்தரத் தீர்வினைக் காண, கடந்தகால சம்பவங்கள் மீள நிகழாத வண்ணம், முன்னேறிச்செல்வதற்கு சிந்தித்து செயற்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, அரச அனுசரணையுடன் சட்டவிரோத குடியேற்றங்கள் முன்னெடுக்கப்படுவதாக இந்த சந்திப்பின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அதிகார பரவலாக்கலானது முழு நாட்டிற்கும் அமுலாக வேண்டும் எனவும் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். இலங்கை அரசாங்கத்தால் சர்வதேச சமூகத்திற்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.