பயிலுநர் மட்டத்தில் இலங்கையின் கால்பந்தாட்டத் தரம்

பயிலுநர் மட்டத்தில் இலங்கையின் கால்பந்தாட்டத் தரம் இருப்பதாக புதிய பயிற்றுநர் தெரிவிப்பு

by Staff Writer 19-02-2020 | 9:21 PM
Colombo (News 1st) இலங்கை கால்பந்தாட்ட அணியின் புதிய பயிற்றுநராக அவுஸ்திரேலிய பிரஜையான அமீர் அலஜிக் நியமிக்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலிய பிரஜாவுரிமையுடைய அமீர் அலஜிக், பொஸ்னிய பிரஜாவுரிமையும் பெற்றவராவார். ஐரோப்பிய கால்பந்தாட்ட சம்மேளனத்தின் பயிற்றுநர்கள் குழுவின் உறுப்பினரான அலஜிக், ஆசிய வலய கால்பந்தாட்டக் கழகங்கள் பலவற்றிலும் பயிற்றுநராக செயற்பட்டுள்ளார். 25 வருடங்களுக்கு மேல் கால்பந்தாட்டப் பயிற்றுநராக அனுபவமுடைய அலஜிக், அவுஸ்திரேலியா, பொஸ்னியா, ஜேர்மனி, அமெரிக்கா ஆகிய நாடுகளிலுள்ள கால்பந்தாட்ட கழகங்களுக்கும் தமது பங்களிப்பை வழங்கியுள்ளார். வீரர்களை நாட்டிற்காக கால்பந்தாட்டத்தில் முழுமையாக ஈடுபடச் செய்வதற்காக வெளிநாட்டு பயிற்றுநர் ஒருவரை நியமிக்க தீர்மானித்ததாக இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவரான அனுர டி சில்வா தெரிவித்தார். இலங்கையின் கால்பந்தாட்டத் தரம் பயிலுநர் மட்டத்தில் இருப்பதாக ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட புதிய பயிற்றுநரான அமீர் அலஜிக் கூறினார். வீரர்களின் ஆற்றல்களை மேம்படுத்துவதற்கு போதிய கால அவகாசம் தேவை எனவும் அவர் குறிப்பிட்டார். இலங்கை கால்பந்தாட்ட அணியில் திறமையான வீரர்களை இணைப்பதற்கு போட்டித்தன்மையுடைய தொழில்சார் தன்மை அவசியம் எனவும் புதிய பயிற்றுநர் வலியுறுத்தினார். உலகக்கிண்ணக் கால்பந்தாட்டத் தொடருக்கான ஆசிய வலய தகுதிகாண் சுற்றில் இலங்கை அணி எதிர்வரும் மார்ச் மாதம் வட மற்றும் தென்கொரிய அணிகளுடன் விளையாடவுள்ளது. இந்தப் போட்டிகளுக்கு இலங்கை அணியை தயார்ப்படுத்துவதே புதிய பயிற்றுநரான அமீர் அலஜிக்கின் முதலாவது பணியாகும்.