பயங்கரவாதம் உருவாக இடமளிக்கப் போவதில்லை: ஜனாதிபதி தெரிவிப்பு

by Bella Dalima 19-02-2020 | 9:17 PM
Colombo (News 1st) நாட்டின் அனைத்து பிரிவுகளிலும் சிறந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பிரிவினைவாதம், பயங்கரவாதம் அல்லது மதவாதத்தை உருவாக்க இடமளிக்கப் போவதில்லை எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஸ தெரிவித்தார். நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மையை உரிய முறையில் பயன்படுத்துவார்கள் என தான் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
எமது பிரதம நீதியரசர் தொடர்பில் மிகுந்த நம்பிக்கையுள்ளது. நாம் சுதந்திரம் வழங்கியுள்ளமையை அரசாங்கத்தின் பலவீனமாக பயன்படுத்த வேண்டாம். கடந்த ஐந்து வருடங்களில் 19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் காரணமாக இந்த நாட்டில் பலமாக இருந்த நிர்வாகத்தை சீர்குலைத்துள்ளனர். ஜனாதிபதி, பாராளுமன்றம் மற்றும் பிரதமருக்கான அதிகாரங்கள் பலவீனப்படுத்தப்பட்டுள்ளன. எனவே, அதனை மாற்றியமைத்து மீண்டும் பலமான அரசாங்கத்தையும், நிறைவேற்று அதிகாரத்தையும், உருவாக்கி மக்களுக்கு சேவையாற்ற வேண்டும்.
என ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார். கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே ஜனாதிபதி இவ்விடயங்களைக் குறிப்பிட்டார். ஒரு இலட்சம் கிலோமீட்டர் வரையில் மாற்று மற்றும் கிராமிய வீதிகளை புனரமைக்கும் திட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஸ தலைமையில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. கண்டி - கலஹா பிரதேசத்தில் இதற்கான ஆரம்ப நிகழ்வு நடைபெற்றது. கலஹா - தெல்தோட்டை, ரிக்கில்கஸ்கட வீதியை புனரமைப்பதற்கான பணிகள் இதன்போது ஆரம்பித்து வைக்கப்பட்டன.

ஏனைய செய்திகள்