T20 தொடரை 4 ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடத்த தீர்மானம்

சர்வதேச இருபதுக்கு 20 சம்பியன்ஷிப் தொடரை 4 ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடத்த தீர்மானம்

by Staff Writer 19-02-2020 | 7:30 AM
Colombo (News 1st) சர்வதேச இருபதுக்கு 20 சம்பியன்ஷிப் தொடரை 4 ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடத்துவதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு தொடக்கம் 2031 ஆம் ஆண்டு வரையான தொலைக்காட்சி உரிமத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தொடரில் 10 அணிகள் விளையாடவுள்ளதுடன் 48 போட்டிகள் நடத்தப்படவுள்ளன. அதன்படி, 2024 மற்றும் 2028 ஆம் ஆண்டுகளில் இருபதுக்கு 20 சம்பியன்ஷிப் தொடரையும் 2025 மற்றும் 2029 ஆம் ஆண்டுகளில் ஒருநாள் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரையும் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக 2026 மற்றும் 2030 ஆம் ஆண்டுகளில் சர்வதேச இருபதுக்கு 20 உலகக் கிண்ணமும் நடத்தப்படவுள்ளது. ஒருநாள் சம்பியன்ஸ் கிண்ணத்தை 6 அணிகளின் பங்குபற்றுதலுடன் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடரில் 16 போட்டிகள் நடத்தப்படவுள்ளன. 2023 ஆம் ஆண்டு தொடக்கம் தொடக்கம் 2031 ஆம் ஆண்டு வரையான தொலைக்காட்சி உரிமத்துக்கான தொடர்களுக்கான திகதி எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், ஒவ்வொரு வருடத்தில் சர்வதேச கிரிக்கெட் பேரவை புதிதாக அறிமுகப்படுத்தும் ஒவ்வொரு தொடர்களுக்கும் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட கிரிக்கெட் நிறுவனங்கள் எதிர்ப்பு வெளியிட்டிருந்தன. தமது கிரிக்கெட் நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்படும் பிரிமியர் லீக் போட்டிகளுக்கான வாய்ப்பு அதனூடாக அற்றுப்போகும் என்பதே இந்த எதிர்ப்புக்கான காரணமாகும். குறிப்பிட்ட பிரிமியர் லீக் தொடர்களினூடாக அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட கிரிக்கெட் நிறுவனங்கள் அதிகளவிலான இலாபத்தை ஈட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.