கொரோனா: சீனப் பெண் வைத்தியசாலையிருந்து வௌியேறினார்

கொரோனா தொற்றுக்குள்ளான சீனப் பெண் வைத்தியசாலையிருந்து வௌியேறினார்

by Staff Writer 19-02-2020 | 8:36 AM
Colombo (News 1st) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி, அங்கொடை தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்துள்ள சீனப் பெண் இன்று (19) வைத்தியசாலையிலிருந்து வௌியேறினார். குறித்த பெண்மணி இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக சீனாவிற்குச் செல்லவுள்ளதாக தொற்றுநோய் விசேட நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். குறித்த சீனப் பெண்ணின் உடலிலிருந்து வைரஸ் முற்றாக நீங்கியுள்ளதா என்பது தொடர்பில் அறிவதற்காக போதியளவிலான பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் தொற்றுநோய் விசேட நிபுணர் சுதத் சமரவீர குறிப்பிட்டுள்ளார். குறித்த அனைத்து பரிசோதனைகளிலும் கொரோனா வைரஸ் தாக்கம் அப்பெண்ணின் உடலில் இல்லை என பரிசோதனைகளின் முடிவில் வௌியாகியுள்ளதாகவும் வைத்தியர் சுதத் சமரவீர மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். சீனாவின் ஹுபே மாகாணத்தைச் சேர்ந்த 43 வயதான பெண்மணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த வேளையில், கடந்த மாதம் 26 ஆம் திகதி கொரனோ வைரஸ் அறிகுறி காரணமாக பரிசோதனை மேற்கொண்ட நிலையில், அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.