முறிகள் மோசடி குற்றவாளிகளைக் கண்டறிய சுயாதீன நீதிமன்றத்தை ஸ்தாபிக்குமாறு சுனில் ஹந்துன்நெத்தி கோரிக்கை

by Staff Writer 18-02-2020 | 8:45 PM
Colombo (News 1st) முறிகள் மோசடி குற்றவாளிகளைக் கண்டறிவதற்காக சுயாதீன நீதிமன்றமொன்றை ஸ்தாபிக்குமாறு கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி சபையில் இன்று கோரிக்கை விடுத்தார். முறிகள் விநியோகம் தொடர்பிலான தடயவியல் கணக்காய்வு அறிக்கை மீதான பாராளுமன்ற விவாதத்தை ஆரம்பித்து உரையாற்றியபோதே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார். சாட்சியங்களின் உண்மைத்தன்மை, சாட்சியங்களை முன்வைக்கும் கணக்காய்வாளர்களின் உண்மைத்தன்மை, அவர்களது தகைமை தொடர்பில் கலந்துரையாடப்பட வேண்டிய இடம் நீதிமன்றமே என சுனில் ஹந்துன்நெத்தி சுட்டிக்காட்டினார். 2005 ஆம் ஆண்டில் இருந்து 2015 ஆம் ஆண்டு வரை நாணய சபை நேரடி கொள்வனவு நடைமுறையை பின்பற்றியது. ஏல நடைமுறை 2015 ஆம் ஆண்டிலிருந்து 2016 ஆம் ஆண்டு வரை பின்பற்றப்பட்டது. இதனை அடிப்படையாகக் கொண்டே கணக்காய்வாளர்கள் இந்த காலப்பகுதியை இரண்டாகப் பிரித்துள்ளனர். அரசாங்கத்திற்கும் மத்திய வங்கிக்கும் ஊழியர் சேமலாப நிதியத்திற்கும் நட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த கொடுக்கல் வாங்கல் ஊடாக சந்தை செயற்பாடுகளுக்கும் நாட்டின் வட்டி வீதத்திற்கும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது என சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார். அரச நிதி நிர்வாகத்தில் பேணப்படக்கூடாத உறவுமுறை மீதான கரிசனை மற்றும் அதிகாரிகளின் தலையீடு என்பன இந்த முறிகள் விநியோகத்தின் போது காணப்பட்டமை உறுதியாகியுள்ளது. ஆகவே, இந்த பாராளுமன்றத்தில் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ள கணக்காய்வு அறிக்கை தொடர்பில் பாராளுமன்றத்தில் விரிவாக ஆராயப்பட வேண்டும் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியவர்கள் உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நாட்டு மக்கள் சார்பில் அவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும் அசாங்கம் இழந்த பணத்தை மீள அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.