பொதுமன்னிப்பு காலம்: 200 துப்பாக்கிகள் ஒப்படைப்பு

பொதுமன்னிப்பு காலப்பகுதியில் 200 துப்பாக்கிகள் பொலிஸ் நிலையங்களில் ஒப்படைப்பு

by Staff Writer 18-02-2020 | 4:52 PM
Colombo (News 1st) சட்டவிரோத துப்பாக்கிகளை அரசாங்கத்திடம் வழங்குவதற்காக அறிவிக்கப்பட்ட பொதுமன்னிப்பு காலப்பகுதியில் 200 துப்பாக்கிகள் பொறுப்பேற்கப்பட்டுள்ளன. துப்பாக்கிகளை இதுவரை ஒப்படைக்காதவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சினால் அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது. அனுமதிப்பத்திரமின்றிய துப்பாக்கிகளை அரசாங்கத்திடம் ஒப்படைப்பதற்காக அறிவிக்கப்பட்ட ஒருவார பொதுமன்னிப்பு காலம் நிறைவடைகின்ற நிலையில், பொலிஸ் மற்றும் புலனாய்வு பிரிவினரால் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமன்னிப்பு காலப்பகுதியில் அனுமதி பத்திரமின்றிய மற்றும் அனுமதிப்பத்திரம் புதுப்பிக்கப்படாமல் இருந்த 200 துப்பாக்கிகள் , அனைத்து மாகாணங்களிலுள்ள பொலிஸ் நிலையங்களிலும் ஒப்படைக்கப்பட்டுள்ளன. நாட்டிலுள்ள அனைத்து சட்டவிரோத துப்பாக்கிகளையும் பொறுப்பேற்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் வழங்கப்பட்ட பணிப்புரைக்கமைய, பாதுகாப்பு அமைச்சினால் கடந்த 5 ஆம் திகதி தொடக்கம் 12 ஆம் திகதி வரை பொதுமன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டது. இதனடிப்படையில், அனுமதிப்பத்திரமின்றிய மற்றும் அனுமதிப்பத்திரம் புதுப்பிக்கப்படாமல் இருந்த துப்பாக்கிகளை கையளித்தவர்களுக்கு எதிராக எவ்வித சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு ஒப்படைத்தவர்கள் தமது துப்பாக்கிகளுக்கான அனுமதிப்பத்திரங்களை புதுப்பித்துக்கொள்ள மற்றும் அனுமதிப்பத்திரங்களை புதிதாக பெற்றுக்கொள்ள துப்பாக்கிகளை பொலிஸாரிடம் ஒப்படைத்த தினத்திலிருந்து மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பொதுமன்னிப்பு காலத்தின் பின்னரும் சட்டவிரோதமான முறையில் துப்பாக்கிகளை வைத்திருப்போர் தொடர்பிலான தகவல்களை வழங்குமாறு பொதுமக்களிடம் பாதுகாப்பு அமைச்சினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.