பொலிஸ் உத்தியோகத்தரை காணவில்லை

கடவத்தை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தரை காணவில்லை

by Staff Writer 18-02-2020 | 9:48 PM
Colombo (News 1st) கடவத்தை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய 14535 இலக்க பொலிஸ் உத்தியோகத்தர் காணாமற்போயுள்ளமை தொடர்பில் பேலியகொடை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 14535 இலக்க பொலிஸ் சாரதி ஜயந்த ராஜபக்ஸ, கடந்த ஞாயிற்றுக்கிழமை வத்தளை பொலிஸ் நிலையத்திற்கு சேவைக்காக சென்றுள்ளதுடன், அன்றைய தினம் மாலை சேவையை நிறைவு செய்து வௌியேறியுள்ளார். போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் பெண் ஒருவருடன் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் சுமார் மூன்று வருடங்கள் தகாத உறவை பேணி வந்துள்ளதுடன், குறித்த பெண்ணின் கணவர் போதைப்பொருள் குற்றச்சாட்டிற்காக சிறைவாசம் அனுபவிக்கும் ஒருவர் எனவும் பொலிஸார் கூறினர். அந்த பெண்ணின் புதல்வர்களும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவதுடன், தகாத உறவு காரணமாக புதல்வர்கள் தம்மை தாக்குவதாக அன்றைய தினம் பொலிஸ் உத்தியோகத்தருக்கு தொலைபேசியில் அவர் தெரிவித்துள்ளார். அதற்கமைய, குறித்த பெண் தங்கியிருந்த வீட்டின் அயல் வீடொன்றுக்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர், நேற்று அதிகாலை 1.20 அளவில் கிரிபத்கொடை பிரதேசத்திலுள்ள விடுதியொன்றுக்கு பெண்ணுடன் சென்றுள்ளதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். பொலிஸ் உத்தியோகத்தர் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து 200 மீட்டர் தொலைவிலுள்ள லும்பினி மாவத்தைக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமரா மூலம் ஜயந்த ராஜபக்ஸ தொடர்பான முக்கிய சாட்சி பொலிஸாருக்கு கிடைத்துள்ளது. மோட்டார் சைக்கிளில் வருகை தந்த ஒருவர், நேற்று அதிகாலை நபரொருவருக்கு ஏதேனுமொன்றை வழங்கும் காட்சிகளும், அதனை அடுத்து முச்சக்கர வண்டியில் வருகை தந்த சிலர் அவரைத் தாக்கி முச்சக்கரவண்டியில் அழைத்துச் செல்லும் காட்சிகளும் பதிவாகியுள்ளன. சம்பவம் இடம்பெற்ற இடத்தில் ஜயந்த ராஜபக்ஸவின் கையடக்கத்தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அவர் தாக்குதலுக்கு இலக்கானமை உறுதி செய்யப்பட்டுள்ளது. கடவத்தையில் CCTV கெமராவில் பதிவாகியிருந்த முச்சக்கரவண்டி பன்னல பகுதிக்கு சென்றுள்ளதுடன், காணாமற்போன பொலிஸ் உத்தியோகத்தருடன் விடுதியில் இருந்த பெண்ணின் இளைய மகன் வசிக்கும் வீட்டிற்கு சென்றுள்ளமை பேலியகொடை பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் ஊடாகக் கண்டறியப்பட்டது. தாம் பார்த்த போது பொலிஸ் உத்தியோகத்தர் உயிருடன் இருக்கவில்லை எனவும், அவரின் கைகளில் காயங்கள் காணப்பட்டதாகவும் குறித்த பெண்ணின் 15 வயது இளைய மகன் கூறியுள்ளார். பொலிஸ் உத்தியோகத்தரை கங்கானிமுல்ல சரணாலயத்திற்கு கொண்டு சென்று கொலை செய்வதாக அப்பெண்ணை அவரின் உறவு முறை மகன் ஒருவர் ஏற்கனவே அச்சுறுத்தியுள்ளார். அதற்கமைய, கங்கானிமுல்ல சரணாலயத்தில் இருந்து இன்று காலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர். பொலிஸ் மோப்ப நாய்களின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது, சரணாலயத்தில் இருந்த இரத்தக் கறைகள் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டன.