BOI இன் தலைவரென தம்மை அடையாளப்படுத்திய ஒருவர் கைது

இலங்கை முதலீட்டு சபையின் தலைவரென போலியாக தம்மை அடையாளப்படுத்திய ஒருவர் கைது

by Staff Writer 16-02-2020 | 11:26 AM
Colombo (News 1st) இலங்கை முதலீட்டு சபையின் (BOI) தலைவராக, போலியாகத் தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட ஒருவர் கொம்பனித்தெரு பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் மதுபோதையுடன் உணவகமொன்றின் ஊழியருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டு, உணவகத்தின் உரிமையாளரைத் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து குறித்த நபர், மேலும் இருவருடன் கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றையும் பதிவு செய்துள்ளார். அத்துடன் குறித்த சந்தேகநபர், காயமடைந்திருந்தமையால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் சந்தேகநபர் இலங்கை முதலீட்டு சபையின் தலைவர் இல்லை என்பது தெரியவந்துள்ளது. வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதாலேயே மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளமை CCTV காணொளி மூலம் தெரியவந்துள்ளது. போலியாகத் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டமை, போலியாக முறைப்பாடு பதிவுசெய்தமை ஆகிய குற்றச்சாட்டுகளால் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சந்தேகநபர் நேற்றிரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.