ஷவேந்திர சில்வாவிற்கு அமெரிக்கா பயணத்தடை

ஷவேந்திர சில்வாவிற்கு அமெரிக்கா பயணத்தடை; இலங்கை அரசாங்கம் கண்டனம்

by Staff Writer 15-02-2020 | 3:29 PM
Colombo (News 1st) இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வாவிற்கு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் பயணத்தடை விதித்துள்ளது. 2009 ஆம் ஆண்டில் இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அவருக்கு இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வௌிநாட்டு அதிகாரிகள் தொடர்பில் மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழல்களில் ஈடுபட்டமை தொடர்பான நம்பத்தகுந்த தகவல்கள் இராஜாங்க செயலாளரிடம் காணப்படும் பட்சத்தில், அந்த அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் அமெரிக்காவிற்குள் பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்படும் என இராஜாங்க திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அமெரிக்காவால் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டமைக்கு இலங்கை அரசாங்கம் கண்டனம் வௌியிட்டுள்ளது. உறுதிப்படுத்தப்படாத தகவல்களின் அடிப்படையில் அமெரிக்காவால் இவ்வாறான பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் ஆட்சேபனை வெளியிட்டுள்ளது. எனவே, இராணுவ தளபதி மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் முன்வைக்கப்படும் ஆதாரங்களின் நம்பகத்தன்மையை சரிபார்த்து, விதிக்கப்பட்டுள்ள பயணத்தடையை மீள்பரிசீலனை செய்யுமாறு இலங்கை அரசாங்கம் அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.