மன்னார் மீனவர்கள் மூவர் இராமேஸ்வரத்தில் கைது

மன்னார் மீனவர்கள் மூவர் இராமேஸ்வரத்தில் கைது

by Staff Writer 15-02-2020 | 6:16 PM
Colombo (News 1st) இராமேஸ்வரம் - தனுஷ்கோடி பகுதியில் கடல் எல்லையை மீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் மூன்று இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தனுஷ்கோடி அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர், அத்துமீறி மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் மூவரையும் தனுஷ்கோடி அரிச்சல்முனை கரைக்கு செல்லுமாறு தெரிவித்துள்ளனர். எனினும், அதை மறுத்த மீனவர்கள் இலங்கை கடல் பகுதிக்குள் செல்ல முயன்ற போது இந்திய கடற்படையினர் ஹெலிகாப்டர் மூலம் விரட்டிச்சென்று கைது செய்ததுடன், அரிச்சல்முனை கடல் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதனையடுத்து, மீனவர்கள் மூவரையும் தமிழக கடலோர காவல் பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் மூவரும் மன்னாரைச் சேர்ந்தவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இன்று அதிகாலை 4 மணியளவில் மீன் பிடிப்பதற்காக சென்ற மீனவர்கள் கடும் காற்று காரணமாக இந்திய எல்லைக்குள் சென்றுவிட்டதாகக் கூறியுள்ளனர்.