நிறைவேற்றுத்துறைக்கு நீதித்துறை தடைகளை ஏற்படுத்தாமல் இருப்பது முக்கியமானதென ஜனாதிபதி தெரிவிப்பு

by Staff Writer 15-02-2020 | 7:40 PM
Colombo (News 1st) மக்களின் நலனுக்காகவும் சுபீட்சத்திற்காகவும் நிறைவேற்றுத்துறை மேற்கொள்ளும் அபிவிருத்தி முயற்சிகளுக்கு நீதித்துறை தடைகளை ஏற்படுத்தாமல் இருப்பது முக்கியமானதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார். நீர்கொழும்பில் நேற்று (14) நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். ''இலங்கை நீதி மற்றும் வர்த்தக மையம்: நோக்கு, சவால்கள் மற்றும் வாய்ப்புகள்” எனும் தொனிப்பொருளில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் வருடாந்த மாநாடு நீர்கொழும்பில் நடைபெற்றது. ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் சபாநாயகர் கரு ஜயசூரிய, ரணில் விக்ரமசிங்க, சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியென சட்டத்துறையில் நீங்கள் கேள்வியுற்றிருப்பீர்கள். இந்தக் குற்றச்சாட்டு தொடர்ச்சியாக முன்வைக்கப்படுகின்றது. அது ஒட்டுமொத்த நடவடிக்கைக்கும் பிரச்சினையாக அமைந்துள்ளது. தொடர்புடைய தரப்பினருக்கு இது அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. சட்டத்துறை மற்றும் அரசாங்கத்தின் அனைத்துப் பிரிவினரும் அதற்கான தீர்வைக் காண வேண்டியது அவசியமானதாகும். இதற்காக மூன்று துறைகளினதும் அதிகாரம் தௌிவாகப் பிரிக்கப்பட்டிருக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். அதனால் ஜனநாயகத்திற்கு குறிப்பிடத்தக்களது அழுத்தம் ஏற்படக்கூடும்
என ஜனாதிபதி இந்த மாநாட்டில் குறிப்பிட்டார். நிறைவேற்றுத்துறை மற்றும் சட்டவாக்கத்துறை ஆகியன மக்களால் ஜனநாயக முறைமையூடாக நியமிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான ஆணை நிறைவேற்றுத்துறைக்கு உள்ளது. நோக்கத்தை நோக்கிப் பயணிப்பதற்கு மக்கள் ஆணை வழங்கியுள்ளனர். ஆகவே, நிறைவேற்றுத்துறையினால் எடுக்கப்படும் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு நீதிமன்ற செயற்பாடு தடை ஏற்படுத்தாதிருத்தல் முக்கியமானது என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.