கொரோனா தொற்று சந்தேகத்தால் ஒருவர் சுட்டுக்கொலை

வட கொரியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நபர் சுட்டுக்கொலை

by Bella Dalima 14-02-2020 | 4:49 PM
Colombo (News 1st) வட கொரியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். வட கொரியா நாட்டை சேர்ந்த வர்த்தக அதிகாரி ஒருவர் சமீபத்தில் சீனாவிற்கு சென்று சொந்த நாடு திரும்பியுள்ளார். இதனால் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என வடகொரிய அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனையடுத்து, அதிகாரிகள் அவரை தனிமைப்படுத்தி தீவிர கண்காணிப்பிற்கு உட்படுத்தி இருந்தனர். இதற்கிடையில், அந்நபர் அந்நாட்டின் பொது இடத்தில் உள்ள குளியல் அறைக்கு சென்றுள்ளார். இது குறித்து தகவலறிந்த பொலிஸார் அந்நபரை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து கொரோனா வைரஸ் பிறருக்கு பரவி விடும் என அதிகாரிகள் பயப்பட்டனர். இதையடுத்து, அவர் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு உயர் அதிகாரிகளின் உத்தரவின் படி உடனடியாக சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இந்த தகவலை அந்நாட்டு செய்தி நிறுவனம் ஒன்று வௌியிட்டுள்ளது.