ஏப்ரல் 21 தாக்குதல்:6 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

ஏப்ரல் 21 தாக்குதல்தாரியின் தந்தை உள்ளிட்ட 6 பேரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு

by Staff Writer 14-02-2020 | 3:45 PM
Colombo (News 1st) கடந்த வருடம் ஏப்ரல் 21 ஆம் திகதி கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் தற்கொலை குண்டுத்தாக்குதல் மேற்கொண்ட மொஹமட் இப்ராஹிம் இல்ஹாம் அஹமட் என்ற தற்கொலை குண்டுதாரியின் தந்தை உள்ளிட்ட 6 பேரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, எதிர்வரும் 28 ஆம் திகதி வரை சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. தற்கொலை குண்டுதாரியின் மனைவி , தெமட்டகொடை தொடர்மாடி குடியிருப்பில் தற்கொலை குண்டை வெடிக்கச்செய்து உயிரிழந்துள்ளார். இவர்களின் மூன்று பிள்ளைகளுடைய குருதி மாதிரிகளைப் பெற்று மேற்கொண்ட பகுப்பாய்வினூடாக, அவர்கள் மொஹமட் இப்ராஹிம் இல்ஹாம் அஹமட் மற்றும் பாத்திமா இல்ஹாம் ஆகியோரின் பிள்ளைகள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.