நாடு கடத்தப்பட்ட சஞ்சீவ் சாவ்லாவிற்கு விளக்கமறியல்

ஆட்டநிர்ணய குற்றச்சாட்டு: நாடு கடத்தப்பட்ட சஞ்சீவ் சாவ்லாவிற்கு விளக்கமறியல்

by Staff Writer 14-02-2020 | 9:07 PM
Colombo (News 1st) ஆட்டநிர்ணயத்தில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட பிரித்தானியரான சஞ்சீவ் சாவ்லா இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்ட நிலையில், அங்கு அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மறைந்த தென் ஆபிரிக்க அணித்தலைவரான Hansie Cronje-உடன் 2000 ஆம் ஆண்டில் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளில் ஒருவராக சஞ்சீவ் சாவ்லா காணப்படுகின்றார். 2000 ஆம் ஆண்டு தென் ஆபிரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் போது வீரர்களை ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபடுத்தும் தரகராக சஞ்சீவ் சாவ்லா செயற்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. அந்த குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டதுடன், ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்ட Hansie Cronje, Herschelle Gibbs உள்ளிட்ட வீரர்களுக்கு தென் ஆபிரிக்க கிரிக்கெட் சபை அப்போது தண்டனை விதித்தது. பிரித்தானிய குடியுரிமை பெற்ற சஞ்சீவ் சாவ்லா உள்ளிட்ட 6 வீரர்களுக்கு எதிராக புது டெல்லி பொலிஸார் 2013 ஆம் ஆண்டில் மோசடிக் குற்றச்சாட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். அதற்கமைய, அவரை இந்தியாவிற்கு நாடு கடத்துமாறு புது டெல்லி பொலிஸார் பிரித்தானியாவை கோரியிருந்தனர். எவ்வாறாயினும், சஞ்சீவ் சாவ்லா 2016 ஆம் ஆண்டு பிரித்தானியாவில் கைது செய்யப்பட்ட போதிலும், வெஸ்மினிஸ்டர் நீதவான் நீதிமன்றம் தடுத்ததால் அவரை நாடு கடத்தும் செயற்பாடு தாமதமானது. அந்த சிக்கலுக்கு தீர்க்கப்பட்டதை அடுத்து, சஞ்சீவ் சாவ்லாவை இந்தியாவிற்கு நாடு கடத்த பிரித்தானியா தீர்மானித்தது. அதற்கமைய, இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்ட சஞ்சீவ் சாவ்லா டெல்லி பொலிஸாரால் 12 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.