எழுவர் விடுதலை: ஆளுநருக்கு உத்தரவிட முடியாது

ராஜிவ் காந்தி கொலை வழக்கு: எழுவர் விடுதலை தொடர்பில் ஆளுநருக்கு உத்தரவிட முடியாது - இந்திய உச்சநீதிமன்றம்

by Bella Dalima 13-02-2020 | 4:36 PM
Colombo (News 1st) இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரை விடுவிப்பது தொடர்பில் ஆளுநருக்கு உத்தரவிட முடியாது என இந்திய உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமக்கான தண்டனையை நிறுத்திவைக்குமாறு கோரி பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீண்டகாலமாக நிலுவையிலுள்ள நிலையில், மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது. ஆளுநருக்கு அனுப்பிய தீர்மானம் மீது இதுவரை தீர்மானம் எடுக்கப்படாதுள்ளதாக தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டுள்ளது. தமிழக அரசு ஆளுநரிடம் முறையிட்டு பதிலைப் பெற்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து தமிழக அரசு ஆளுநரிடம் கோரிக்கை விடுக்க வேண்டுமே தவிர, நீதிமன்றம் நேரடியாக அழுத்தம் விடுக்க முடியாது என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. இது தொடர்பில் உத்தரவு பிறப்பிப்பதற்கு அரசுக்கு அதிகாரமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த 28 ஆண்டுகளாக சிறையிலுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை கடந்த 2018 செப்டம்பர் 9 ஆம் திகதி தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியது. எனினும், ஆளுநர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால், தம்மை சட்டவிரோதமாக சிறையில் அடைத்து வைத்திருப்பதாகவும் விடுதலை செய்யுமாறும் நளினி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.