ஐ.தே.க செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு

ஐ.தே.க செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு: தேர்தலில் போட்டியிட விண்ணப்பிக்குமாறு பகிரங்க அழைப்பு

by Staff Writer 13-02-2020 | 9:10 PM
Colombo (News 1st) நாளை (14) நடைபெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை (17) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையே நேற்றிரவு நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து இந்தக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து பொதுத்தேர்தலில் போட்டியிடும் சின்னம் தொடர்பில் தீர்மானிப்பதற்காக சஜித் பிரேமதாச, மலிக் சமரவிக்ரம, மங்கள சமரவீர, கபீர் ஹாசிம் ஆகியோர் அடங்கிய குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. ரவி கருணாநாயக்க, அகிலவிராஜ் காரியவசம், லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் ஜோன் அமரதுங்க ஆகியோரும் இந்தக் குழுவிற்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, இன்று லங்காதீப பத்திரிகையின் விளையாட்டு செய்திக்காக ஒதுக்கப்பட்டுள்ள பக்கத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் பொதுத்தேர்தலில் போட்டியிட விண்ணப்பிக்குமாறு பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கட்சி பொதுச்செயலாளரின் மின்னஞ்சல் முகவரியும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், மாதிரி விண்ணப்பத்தை பூரணப்படுத்தி அனுப்பிவைக்குமாறு அதில் கோரப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்