இங்கிலாந்தை வென்றது தென்னாபிரிக்கா

இங்கிலாந்தை வென்ற தென்னாபிரிக்கா: ஒரு ஓட்டமே ஆட்டத்தை நிர்ணயித்தது

by Staff Writer 13-02-2020 | 10:35 AM
Colombo (News 1st) இங்கிலாந்திற்கு எதிரான முதலாவது சர்வதேச இருபதுக்கு 20 போட்டியில் தென்னாபிரிக்கா ஒரு ஓட்டத்தால் வெற்றியீட்டியது. ஈஸ்ட் லண்டன் (East  London) மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா சார்பாக டெம்பா பவுமா 43 ஓட்டங்களை பெற்றார். அணித்தலைவர் குயின்டன் டி கொக்கும் வென் டு டசனும் தலா 31 ஓட்டங்களை பெற்றனர். தென்னாபிரிக்கா 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 177 ஓட்டங்களை பெற்றது. கிறிஸ் ஜோர்தான் 2 விக்கெட்களை வீழ்த்தினார். வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து 19 ஓட்டங்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது. எனினும், ஜேசன் ரோய் 38 பந்துகளில் 3 சிக்சர்கள் 7 பவுண்டரிகளுடன் 70 ஓட்டங்களை விளாசினார். பின்வரிசையில் இங்கிலாந்து 23 ஓட்டங்களை பெறுவதற்குள் மூன்று விக்கெட்களை இழந்தது. பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி , ஷாம் கரான் ஆகியோரால் 6 ஓட்டங்களை கடக்க முடியவில்லை. அணித்தலைவர் ஒய்ன் மோர்கன் 34 பந்துகளில் 52 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் இங்கிலாந்தின் வெற்றிக்காக மூன்று ஓட்டங்கள் தேவைப்பட்டன. லுங்கி இங்கிடி கடைசி ஓவரில் இரண்டு விக்கெட்களை வீழ்த்தி தென்னாபிரிக்காவின் வெற்றிக்கு வழிவகுத்தார். சர்வதேச இருபதுக்கு 20 அரங்கில் தென்னாபிரிக்கா ஓர் ஓட்டத்தால் வெற்றியீட்டும் மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும். 03 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரில் 1- 0 என தென்னாபிரிக்கா முன்னிலை பெற்றுள்ளது.