பகிடிவதை தொடர்பில் வகுப்புத்தடை விதிக்கப்பட்ட மாணவரின் வீட்டில் தாக்குதல்

by Staff Writer 12-02-2020 | 11:03 AM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - மானிப்பாய், நவாலி வீதியிலுள்ள வீடொன்றில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் சந்தேகநபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. முகங்களை மூடிக்கொண்டு சென்ற அடையாளம் தெரியாதோரால் நேற்றிரவு 10 மணியளவில் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வீட்டின் ஜன்னல்கள் உடைக்கப்பட்டுள்ளதுடன், சொத்துகளும் சேதமாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பகிடிவதை காரணமாக அண்மையில் பல்கலைக்கழக வகுப்புத்தடை விதிக்கப்பட்ட மாணவரின் வீட்டிலேயே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் செய்தியாளர் கூறினார். தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட வீட்டுக்கு அருகிலுள்ள CCTV காணொளிகளை அடிப்படையாகக் கொண்டு சந்தேகநபர்கள் தேடப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். மானிப்பாய் பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.