அமெரிக்க ஒப்பந்தத்திலிருந்து விலகும் பிலிப்பைன்ஸ்

அமெரிக்காவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்திலிருந்து விலகும் பிலிப்பைன்ஸ்

by Staff Writer 12-02-2020 | 7:51 AM
Colombo (News 1st) அமெரிக்கப் படையினரின் பயிற்சி சம்பந்தமான பாதுகாப்பு ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக பிலிப்பைன்ஸ் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தினூடாக அமெரிக்கப் படையினர் பயிற்சியளிப்பதற்கும் கூட்டு இராணுவ ஒத்திகைகளில் ஈடுபடவும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், அமெரிக்காவுடனான தமது நீண்டகால கூட்டணியிலிருந்து வௌியேறி, சீனாவுடனான உறவுகளை வலுப்படுத்தவுள்ளதாக பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிக்கோ டுடெர்டே (Rodrigo Duterte) நீண்டகாலமாக எச்சரிக்கை விடுத்து வந்திருந்தார். இதனடிப்படையில் வருகைதரும் இராணுவப் படைகளின் ஒப்பந்தத்திலிருந்து வௌியேறும் உத்தியோகபூர்வ அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாக அவரின் வௌிவிவகாரச் செயலாளர் தமது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். குறித்த ஒப்பந்தம் வலிதற்றதாகும் வரை, 180 நாட்கள் காலப்பகுதி இந்த அறிவிப்பினூடாக ஆரம்பமாவதாகச் சுட்டிக்காட்டப்படுகின்றது. பிலிப்பைன்ஸின் இந்த நகர்வானது இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துமென அமெரிக்கா தெரிவித்துள்ளது. அரசியல் கூட்டு நாடு என்ற அடிப்படையில், பிலிப்பைன்ஸுக்கு வழங்கப்பட்டு வந்த விசாவினை அமெரிக்கா நீக்கியதைத் தொடர்ந்து, இந்த ஒப்பந்தத்தை இரத்துச் செய்யவுள்ளதாக பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிக்கோ டுடெர்டே கடந்த மாதம் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.