வாகனத்துடன் சேர்த்து பொதுமக்களும் எரித்துக் கொலை

வாகனத்துடன் சேர்த்து பொதுமக்களும் எரித்துக் கொலை ; நைஜீரியாவில் சம்பவம்

by Staff Writer 11-02-2020 | 10:52 AM
Colombo (News 1st) நைஜீரியாவின் வட கிழக்குப் பிராந்தியத்தில், சந்தேகத்திற்குரிய ஆயுததாரிகளால் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன், பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கடத்திச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது. கொல்லப்பட்டவர்களில் அதிகமானோர் பயணத்தின் இடைநடுவே வாகனத்தை நிறுத்தி அதில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் வாகனத்துடன் சேர்த்து எரியூட்டிக் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மேலும் குறிப்பிட்டுள்ளனர். 2009ஆம் ஆண்டு முதல் போகோஹராம் குழுவினர் நைஜீரியாவில் மிருகத்தனமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த மோதலில் சிக்கி கிட்டத்தட்ட 35,000 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு, 2 மில்லியனுக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் சுமார் 100 பேர் கடத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. ஆயுததாரிகள் தோற்கடிக்கப்பட்டுள்ளதாக நைஜீரிய அரசாங்கம் தொடர்ச்சியாகக் கூறிவருகின்ற போதிலும் தொடர்ந்தும் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. சுற்றுலா சென்றுகொண்டிருந்தவர்கள், பயணத்தின் நடுவே இரவு வேளையில் வாகனத்தை நிறுத்திவிட்டு அதனுள் உறங்கிக்கொண்டிருக்கும் போதே இந்தக் கொடூரச் செயல் இடம்பெற்றுள்ளது. இதனைத் தவிர குறித்த ஆயுதக் குழுவினர் சுற்றிவளைப்பொன்றில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் பலரைக் கடத்திச் சென்றுள்ளனர். போகோஹராம் ஆயுதக்குழு இந்தச் செயலைப் புரிந்திருக்கலாம் என சந்தேகம் வௌியிடப்பட்டுள்ளது.