மன்னார் மனிதப் புதைகுழி வழக்கில் இருந்து சட்டத்தரணிகள் வௌிநடப்பு

by Staff Writer 11-02-2020 | 9:21 PM
Colombo (News 1st) மன்னார் சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி வழக்கில் இருந்து இன்று சட்டத்தரணிகள் வௌிநடப்பு செய்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணிகளே வௌிநடப்பு செய்ததாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார். மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போதே இன்று முற்பகல் வௌிநடப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்றைய வழக்கு விசாரணையின் போது அரச தரப்பு சட்டத்தரணியினால் முன்வைக்கப்பட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணிகள் வௌிநடப்பு செய்துள்ளனர். அரச தரப்பு சட்டத்தரணி மன்னிப்புக் கோர வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அரச தரப்பு சட்டத்தரணி மன்றில் மன்னிப்புக் கோரிய பின்னர் இன்று பிற்பகல் மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மனித எலும்புக்கூடுகள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள அறையின் ஜன்னல் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன், உடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து மன்னார் பொலிஸாரால் மற்றுமொரு வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, சதொச வளாகத்தில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளுடன் காணப்படும் தொல்பொருட்களைப் பிரித்து எடுப்பதற்கான வழக்கு விசாரணை எதிர்வரும் மார்ச் மாதம் 16 ஆம், 17 ஆம் திகதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.