கஞ்சா, பீடி இலைகள் கடத்தல் அதிகரிப்பு

இராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு கஞ்சா, பீடி இலைகள் கடத்தல் அதிகரிப்பு

by Staff Writer 11-02-2020 | 9:25 PM
Colombo (News 1st) இராமேஸ்வரம் தீவகப் பகுதியிலிருந்து இலங்கைக்கு கடந்த சில தினங்களாக கஞ்சா மற்றும் பீடி இலைகள் அதிகளவில் கடத்தப்பட்டு வருகின்றன. இந்த கடத்தல்களை முறியடிப்பதற்கு இராமேஸ்வரம் தீவகப் பகுதி மத்திய மாநில உளவுப் பிரிவு மற்றும் கடலோர பாதுகாப்பு பொலிஸார் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். அத்துடன், இந்திய கடலோர காவல் பிரிவினரும் கடற்படையினரும் தீவிர ரோந்துப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் இலங்கைக்கு கடத்தவிருந்த சுமார் 20 மூட்டை பீடி இலைகளை கடலில் போட்டுவிட்டு சந்தேகநபர்கள் தப்பிச்சென்றுள்ளனர். நேற்று (10) மண்டபம் பகுதி வீதியோரத்தில் 50 மூடை பீடி இலைகள் கைவிடப்பட்டுள்ளதுடன், இன்று அதிகாலை இராமேஸ்வரம் வடக்கு துறைமுக கடற்பகுதியில் 11 மூட்டைகளில் சுமார் 600 கிலோ பீடி இலைகள் கரை ஒதுங்கியிருந்ததாக நியூஸ்ஃபெஸ்ட்டின் இராமேஷ்வரம் செய்தியாளர் குறிப்பிட்டார். இதேவேளை, வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 1852 கிலோகிராம் பீடி இலை கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் இசுறு சூரிய பண்டார குறிப்பிட்டார். கடந்த வருடத்தில் 58 தொன் பீடி இலை கைப்பற்றப்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.