முப்படையின் 6259 பேர் சேவைக்கு மீள திரும்பினர்

பொது மன்னிப்பு காலத்தில் முப்படையை சேர்ந்த 6259 பேர் சேவைக்கு மீள திரும்பினர்

by Staff Writer 11-02-2020 | 5:32 PM
Colombo (News 1st) பொது மன்னிப்பு காலப்பகுதியில் முப்படையை சேர்ந்த 6259 பேர் சேவைக்கு மீள அறிக்கையிட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த காலப்பகுதியில் உயர் அதிகாரிகள் 13 பேர் மீள சேவைக்கு சமூகமளித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதிக்கான அதிகாரங்களுக்கு அமைய, கடந்த 5 ஆம் திகதி தொடக்கம் 12 ஆம் திகதி வரையான காலப்பகுதி பொதுமன்னிப்பு காலமாக அறிவிக்கப்பட்டது. இந்த காலப்பகுதியில் இலங்கை இராணுவத்தை சேர்ந்த உயர் அதிகாரிகள் 6 பேரும் 4528 உறுப்பினர்களும் மீண்டும் சேவைக்கு சமூகமளித்துள்ளனர். கடற்படையை சேர்ந்த 707 பேர், விமானப்படையை சேர்ந்த 7 உயர் அதிகாரிகள் அடங்கலாக 1024 பேர் பாதுகாப்பு படையில் மீள இணைந்துள்ளனர். சேவையிலிருந்து தப்பிச்சென்றவர்கள், அருகிலுள்ள பாதுகாப்பு படைத்தளத்திற்கு சென்று அறிக்கையிடுவதனூடாக சேவையில் மீள இணைந்துக்கொள்வதற்கு அல்லது உத்தியோகபூர்வமாக சேவையிலிருந்து விலகுவதற்கான பொதுமன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்