by Bella Dalima 11-02-2020 | 4:17 PM
Colombo (News 1st) 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த சனிக்கிழமை பதிவான 62.59 சதவீத வாக்குகளை எண்ணும் பணி தற்போது நடைபெற்று வருகின்றது.
ஆரம்பம் முதலே ஆம் ஆத்மி கட்சி முன்னிலை பெற்று வருகின்றது. இதனால் அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. அவர் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி, பாரதிய ஜனதா, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனைப்போட்டி என்றாலும் ஆம் ஆத்மி கட்சிக்கும் பா.ஜ.க-வுக்கும் இடையிலான போராக பெரும்பாலும் காணப்பட்ட நிலையில், வாக்குப்பதிவிற்கு பின்னர் வெளியான கருத்துக் கணிப்பில், டெல்லியில் மீண்டும் ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடிக்கும் என்றும் கடந்த 2015 சட்டப்பேரவைத் தோ்தலைக் காட்டிலும், இத்தோ்தலில் பா.ஜ.க-வுக்கு அதிக தொகுதிகள் கிடைக்கும் என்றும் கருத்துக் கணிப்புகளில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2015 டெல்லி சட்டப்பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மிக்கு 67 தொகுதிகள், பா.ஜ.க மூன்று தொகுதிகளில் வெற்றி பெற்றன. காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் 70 தொகுதிகளில் 54 தொகுதிகளில் ஆம் ஆத்மியும், 15 தொகுதிகளில் பாஜகவும், காங்கிரஸ் 1 தொகுதியிலும் முன்னிலை வகித்து வருகிறது.
ஆட்சி அமைக்க 36 உறுப்பினர்கள் தேவையாக உள்ள நிலையில், ஆம் ஆத்மி அதிகமான தொகுதிகளில் முன்னிலை வகித்து வருவதால், மீண்டும் கெஜ்ரிவால் ஆட்சி அமைப்பதற்கு வாய்ப்புள்ளதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 67 இடங்களைப் பிடித்து ஆட்சி அமைத்தது.