நரேந்திர மோடியை சந்தித்தார் மஹிந்த ராஜபக்ஸ

பாரத பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் மஹிந்த ராஜபக்ஸ

by Staff Writer 08-02-2020 | 3:24 PM
Colombo (News 1st) இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, பாரத பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார். புதுடெல்லியிலுள்ள ராஷ்ட்ரபதிபவனில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கும் இந்திய வௌிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கும் இடையில் இன்று காலை கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இரு நாடுகளின் ஒத்துழைப்புகளுடன் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்கள் மற்றும் புரிந்துணர்வு செயற்பாடுகள், சுற்றுலாத்துறை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. இதேவேளை, இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இன்று பிற்பகல் சந்திக்கவுள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் இந்திய விஜயத்தில், திருப்பதி ஏழுமலையான் தரிசனம், புத்தகயா தரிசனம் மற்றும் வாரணாசிக்கான விஜயம் ஆகியனவும் திட்டமிடப்பட்டுள்ளன. மத அனுஷ்டான நடவடிக்கைகள் நாளை ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளதாக இந்திய வௌிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை, இந்தியாவின் சிரேஷ்ட அரச அதிகாரிகளுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இருதரப்பு கலந்துரையாடலில் ஈடுபட திட்டமிட்டுள்ளார். இதன்போது அரசியல், சுற்றுலா, பாதுகாப்பு, கலாசாரம், வர்த்தகம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளனர். கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பில் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து இலங்கை, இந்தியா, மாலைத்தீவு இடையிலான ஒத்துழைப்பு குறித்தும் இந்த விஜயத்தின்போது விவாதிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பாரதப் பிரதமர் நரேந்திரமோடி விடுத்த அழைப்பை ஏற்று இந்தியாவிற்கு சென்றுள்ள பிரதமர் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை அங்கு தங்கியிருப்பார்.