வடக்கில் மலேரியா நுளம்புகள் அதிகரிப்பு

வடக்கில் மலேரியா நுளம்புகள் அதிகரிப்பு

by Staff Writer 07-02-2020 | 3:56 PM
Colombo (News 1st) மலேரியா நோய் காவியாக இனங்காணப்பட்டுள்ள Anopheles Stephensi நுளம்பின் பெருக்கம் துரிதமாக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு மீண்டும் வட மாகாணத்தில் இந்த நுளம்பு இனங்காணப்பட்டதாக தேசிய மலேரியா தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் பிரசாத் ரணவீர தெரிவித்தார். யாழ். நகரப்பகுதி, நல்லூர் மற்றும் கல்முனை ஆகிய பகுதிகளில் கட்டுப்படுத்த முடியாத வகையில் இந்த நுளம்பு தற்போது துரிதமாக பெருகி வருவதாக அவர் கூறினார். எனினும், யாழ். மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களை தவிர வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலுள்ள கிணறுகளில் இந்த நுளம்பு பெருக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய மலேரியா தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் குறிப்பிட்டார். தூய்மையான நீரிலேயே இந்த நுளம்பு பெருகுவதாகவும் கிணறுகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு மீன்கள் பயன்படுத்தப்படுவதாகவும், எனினும் யாழ்ப்பாணத்திலுள்ள கிணறுகளில் அதிக குளோரின் காணப்படுவதால் நுளம்புகளை கட்டுப்படுத்த பயன்படுத்தும் மீன்கள் குறுகிய காலத்திற்குள்ளேயே உயிரிழப்பதாகவும் தேசிய மலேரியா தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் சுட்டிக்காட்டினார். நுளம்புகள் அதிகளவில் பெருகும் பகுதிகளிலுள்ள கிணறுகளை மூடுவதற்கு நுளம்பு வலைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் கூறினார். எவ்வாறாயினும், இது தொடர்பில் அவதானமாக செயற்படுமாறும் தேசிய மலேரியா தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் பிரசாத் ரணவீர அறிவித்துள்ளார். கடந்த வருடம் மலேரியாவினால் 53 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.