ஜனாதிபதியின் வாக்குறுதியால் ஆர்ப்பாட்டத்தை கைவிட்ட டெங்கு ஒழிப்பு உத்தியோகத்தர்கள்

by Staff Writer 07-02-2020 | 3:46 PM
Colombo (News 1st) ஒரு இலட்சம் தொழில் வாய்ப்புக்களை வழங்கும் வேலைத் திட்டத்தின் கீழ் சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்பு உதவி உத்தியோகத்தர்களை இணைத்துக்கொள்வதாக ஜனாதிபதி தெரிவித்ததன் பின்னர் அவர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது. ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்திற்கு சென்ற, சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்பு உதவி உத்தியோகத்தர்களாக சேவையாற்றி தொழிலை இழந்துள்ளதாகக் கூறப்படும் குழுவினர் இன்று காலை முதல் அங்கு கூடியிருந்தனர். தொழிலை இழந்தவர்கள் மீண்டும் இணைத்துக்கொள்ளப்பட வேண்டும், ஓய்வூதியக் கொடுப்பனவு உள்ளிட்ட சில கோரிக்கைகளை இவர்கள் முன்வைத்தனர். இன்று பகல் திடீரென ஆர்ப்பாட்ட இடத்திற்கு சென்ற ஜனாதிபதி அவர்களுடன் கலந்துரையாடினார். வெற்றிடங்கள் இன்றி பணியாளர்களை இணைத்துக்கொண்டால் இவ்வாறான பிரச்சினைகள் நேரும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஒரு இலட்சம் தொழில் வாய்ப்புகளில் அவர்களை இணைத்துக்கொள்வதாக வாக்குறுதியளித்தார். ஜனாதிபதியின் இந்த அறிவிப்பை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.