ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரை எதிர்கொள்ள அரசாங்கம் தயாரா?

by Bella Dalima 06-02-2020 | 8:25 PM
Colombo (News 1st) ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத்தொடர் சுவிட்ஸர்லாந்தின் தலைநகர் ஜெனிவாவில் எதிர்வரும் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அமைய, இலங்கையின் மனித உரிமைகள் விடயங்களை நிறைவேற்றிக்கொள்வதற்காக மேலும் 2 வருடங்கள் கால அவகாசம் கோரி சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை கடந்த வருடம் மார்ச் மாதம் 21 ஆம் திகதி நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது. பிரித்தானியாவின் தலைமையில் இலங்கையின் இணை அனுசரணையுடன் வாக்கெடுப்பின்றி இந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டது. பிரேரணை நிறைவேற்றப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியாகும் நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத்தொடர் இந்த மாதம் ஆரம்பமாகவுள்ளது. கடந்த ஒரு வருட காலத்தில் இலங்கையின் மனித உரிமைகள் விடயங்களை நிறைவேற்றிக்கொள்வதற்காக எடுக்கப்பட்ட செயற்பாடுகள் தொடர்பில் இம்முறை மாநாட்டில் விடயங்களை சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. இவ்விடயத்தில் தலையிட்டு, நாட்டிற்கு அநீதி இழைக்கப்படாத வகையில் சீர்திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டார். இம்முறை ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கை அரசாங்கத்தின் நகர்வு தொடர்பில் வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையில் செயற்பாடுகள் இடம்பெறுவதாக அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் கலந்துகொள்ள தமிழ் அரசியல் கட்சிகள் இம்முறையும் தயாராகின்றன. இந்நிலையில், இம்முறையும் தமது எதிர்ப்பை வௌியிடப் போவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டார்.