அமெரிக்க ஜனாதிபதி குற்றமற்றவர் என நிரூபணம்

அமெரிக்க ஜனாதிபதி குற்றமற்றவர் டொனால்ட் ட்ரம்ப் என நிரூபணம்

by Staff Writer 06-02-2020 | 8:09 AM
Colombo (News 1st) தமக்கு எதிரான குற்றப்பிரேரணை மீதான செனட் விசாரணையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றமற்றவராக நிரூபணமாகியுள்ளார். அதிகாரத் துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டில் 52 செனட்டர்கள் எதிராகவும் 48 பேர் ஆதரவாகவும் வாக்களித்துள்ளனர். அத்துடன் காங்கிரஸின் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பான குற்றச்சாட்டில் 53 செனட்டர்கள் எதிராகவும் 47 பேர் ஆதரவாகவும் வாக்களித்துள்ளனர். முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் அவரது மகனுக்கு எதிராக விசாரணைகளை முடக்கிவிடுமாறு உக்ரைனுக்கு அழுத்தம் விடுத்தமை ட்ரம்புக்கு எதிராக குற்றச்சாட்டு வைக்கப்பட்டமைக்கான முக்கிய காரணியாகும். மேலும், அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்தமை மற்றும் காங்கிரஸின் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகள் ஜனநயாக கட்சியினரினால் ட்ரம்ப் மீது சுமத்தப்பட்டன. இந்நிலையில், ட்ரம்ப்புக்கு எதிரான குற்றப்பிரேரணை மீதான விவாதங்கள் செனட் சபையில், கடந்த மாதம் 21 ஆம் திகதி ஆரம்பமாகி நேற்று இறுதி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் குற்றப்பிரேரணைக்கு எதிராக பெரும்பாலானவர்கள் வாக்களித்தமையினால், அமெரிக்காவின் 45 ஆவது ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டுள்ளார். எவ்வாறாயினும், எதிர்வரும் நவம்பர் மாதம் 3ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், குற்றப்பிரேரணையை சந்தித்த ஒரு ஜனாதிபதி வேட்பாளராக டொனால்ட் ட்ரம்ப் களமிறங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும் இந்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் அமெரிக்க ஜனாதிபதி மறுத்தமை குறிப்பிடத்தக்கது.