மாவை சேனாதிராசாவும் இந்தியா பயணம்

by Staff Writer 05-02-2020 | 6:54 PM
Colombo (News 1st) விரைவில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் அரங்கு பரபரப்படைய ஆரம்பித்துள்ளது. இந்நிலையில், தமிழ் அரசியல் பிரமுகர்கள் இந்தியாவிற்கு அவ்வப்போது சென்று வருவதையும் காண முடிகிறது. தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் முன்னாள் வட மாகாண முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் அண்மையில் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இந்திய விஜயத்தின் பின்னர் கருத்து வௌியிட்ட அவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்பட்டால், மீண்டும் கூட்டமைப்பில் இணைவது தொடர்பில் பரிசீலிக்க முடியும் என கூறியிருந்தார். மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா சென்றுள்ளதாகவும் இந்திய அரசியல் பிரதிநிதிகள் சிலரை சந்திப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் அண்மையில் குறிப்பிட்டிருந்தார். தமிழீழ விடுதலை இயக்கத்திலிருந்து பிரிந்து, தமிழ் தேசியக் கட்சி ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் எம்.கே.சிவாஜிலிங்கம் இந்தியாவிற்கு மேற்கொண்டுள்ள முதலாவது விஜயம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதேவேளை, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனும் தற்போது இந்தியாவில் உள்ளார். மாற்றுத் தலைமையை உருவாக்குவதற்கான பல முயற்சிகளை ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மேற்கொண்டு வருகின்ற நிலையில், அவர் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். தற்போது இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவும் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.