ஆசிய பங்குச்சந்தைகளின் சுட்டெண் வீழ்ச்சி

கொரோனாவின் தாக்கம்: ஆசிய பங்குச்சந்தைகளின் சுட்டெண் வீழ்ச்சி

by Staff Writer 03-02-2020 | 3:44 PM
Colombo (News 1st) கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், ஆசிய பங்குச்சந்தைகளின் சுட்டெண் வீழ்ச்சியடைந்துள்ளது. ஜப்பான், சீனா, அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய நாடுகளின் பங்குச் சந்தைகளிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. சீன பங்குச்சந்தைகளின் நடவடிக்கைகள், புத்தாண்டுக்கு பின்னர் இன்று ஆரம்பமானதுடன் பங்கு சுட்டெண் 9 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. அத்துடன், சீனாவின் யுவான் நாணயப் பெறுமதியும் ஓர் வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. கொரோன வைரஸ் தாக்கத்தினால் சீனாவில் இதுவரை 361 பேர் உயிரிழந்துள்ளதுடன் 17,205 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கு அமெரிக்காவினால் வழங்கப்பட்ட ஒத்துழைப்புகளை சீனா நிராகரித்துள்ளது. சீனாவிலிருந்து வருகைதரும் வௌிநாட்டவர்களுக்கு தமது நாட்டுக்குள் நுழைவதற்கு அமெரிக்கா தடை விதித்துள்ளதால் சீனா, இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது. இந்நிலையில், வேகமாகப் பரவும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவது குறித்து கலந்துரையாடுவதற்கு G7 நாடுகள் இன்று கூடவுள்ளன. இதேவேளை, சீனாவின் வுஹான் நகரில் வசித்த 30 நாடுகளைச் சேர்ந்த 250 இற்கும் மேற்பட்டோரை விமானம் மூலம் அழைத்துச் செல்வதற்கு பிரான்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில், ஹொங்கொங் வைத்தியசாலை ஊழியர்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஹொங்கொங்கில், சீனாவுக்கான ரயில் மற்றும் படகு சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளபோதிலும் சுகாதார ஊழியர்கள் ஹொங்கொங் சீன எல்லைப்பகுதியை மூடுமாறு வலியுறுத்தியுள்ளனர். ஹொங்கொங்கில் 15 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.