ஒரு கிலோகிராம் நெல் 50 ரூபாவிற்கு கொள்வனவு

ஒரு கிலோகிராம் நெல் 50 ரூபாவிற்கு கொள்வனவு

by Staff Writer 03-02-2020 | 3:37 PM
Colombo (News 1st) 2019/2020 பெரும்போகத்தில் அரசாங்கம் நெல்லைக் கொள்வனவு செய்யும் பணியின் கீழ், ஒரு கிலோகிராம் நெல்லை 50 ரூபாவுக்கு கொள்வனவு செய்வதற்கு தற்போது அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த வேலைத்திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு விசேட சலுகைகளாக முதல்தடவையாக ஈரத்தன்மையுடன் கூடிய நெல் அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இதன்கீழ் 25 வீத ஈரத்தன்மையைக் கொண்ட தரத்துடனான நெல் கொள்வனவு செய்யப்படுகிறது. கடந்த வருடங்களில் நாட்டரிசி நெல் ஒரு கிலோகிராம் 38 ரூபாவுக்கும் சம்பா நெல் ஒரு கிலோகிராம் 41 ரூபாவுக்கும் கொள்வனவு செய்யப்பட்டது. இந்தத் தடவை அனைத்து ரக நெல்லுக்கும் ஆகக்கூடிய விலை வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, அரசாங்கம் ஒரு கிலோகிராம் நெல்லை 50 ரூபாவுக்கு கொள்வனவு செய்கின்றது. விவசாயிகளுக்கு மிகவும் வசதியான முறையில் அரசாங்கத்திற்கு நெல்லை வழங்குவதற்காக இரண்டு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இதன்கீழ், நெல் சந்தைப்படுத்தல் சபையின் மூலம் கூடுதல் ஈரத்தன்மையைக் கொண்டதும் தரத்துடனான நெல் கொள்வனவு செய்யப்படுகிறது.