4/21 தாக்குதல்: 12 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

ஏப்ரல் தாக்குதல்: 12 பேரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு

by Staff Writer 03-02-2020 | 6:09 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 12 பேரின் விளக்கமறியலை கல்முனை நீதவான் நீதிமன்றம் இன்று (03) மீண்டும் நீடித்துள்ளது. குறித்த வழக்கு, மாவட்ட நீதிபதியும் கல்முனை நீதிமன்ற நீதவானுமாகிய I.N. ரிஷ்வான் முன்னிலையில் இன்று இரு வேறு சந்தர்ப்பங்களில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விளக்கமறியலில் வைக்கப்பட்ட அனைவரும் சட்ட மாஅதிபரின் பணிப்புரைக்கமைய வெவ்வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்ட நிலையில் இன்று மீண்டும் விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த சந்தேகநபர்கள் கடந்த காலத்தில் அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் குற்றப்புலனாய்வுப் பிரிவு மற்றும் பாதுகாப்பு தரப்பினர்களால் அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பல மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பொலிஸாரின் ஆட்சேபனையால் அனைத்து சந்தேகநபர்களினதும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டு வழக்கு விசாரணை எதிர்வரும் 17ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது. சந்தேகநபர்கள் அனைவரும் காத்தான்குடி, கல்முனை, சாய்ந்தமருது, சம்மாந்துறை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களாவர். ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு உதவி ஒத்தாசை வழங்கிய சந்தேகநபர்களும் கடும் பாதுகாப்புடன் நீதிமன்ற விசாரணைக்கு அழைத்து வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.