கொரோனா வைரஸ்: அமெரிக்கா மீது சீனா குற்றச்சாட்டு

கொரோனா வைரஸ்: அமெரிக்கா மீது சீனா குற்றச்சாட்டு

by Chandrasekaram Chandravadani 03-02-2020 | 7:31 PM
Colombo (News 1st) கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் அமெரிக்கா பதற்றத்தை உருவாக்கியுள்ளதாக சீனா குற்றஞ்சுமத்தியுள்ளது. பொது சுகாதார அவசர நிலையை பிரகடனப்படுத்த அமெரிக்கா எடுத்துள்ள தீர்மானம் மற்றும் சீனாவுக்கு பயணித்துள்ள வௌிநாட்டவர்கள் நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை என்பவற்றை கருத்திற்கொண்டு சீனா இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. சீனாவில் மாத்திரம் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 361 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் 17,000 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, சீனாவுக்கு வௌியே தொற்றுக்குள்ளாகியோரின் எண்ணிக்கை 150 ஆக அதிகரித்துள்ளதுடன் பிலிப்பைன்சில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தியா - கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியோரின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. கடந்த சில வாரங்களுக்குள் 20 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, பாகிஸ்தான் சீனாவுக்கான விமான சேவைகளை மீள ஆரம்பித்துள்ளது. உலக சுகாதார ஸ்தாபனம் கோரோனா வைரஸ் தொற்று குறித்து சர்வதேச அவசர நிலையை பிரகடனப்படுத்தியதை தொடர்ந்து நேற்று வரை பாகிஸ்தான் சீனாவுக்கான விமான சேவைகளை இரத்து செய்தது. இதனிடையே, கொரோனா வைரஸ் பரவும் அச்சம் காரணமாக சீனாவுடனான 13 எல்லைகளில் 10 எல்லைகள் மூடப்படுவதாக ஹொங்கொங் நிர்வாகத்தலைவர் கெரி ​லேம் அறிவித்துள்ளார்.